கால்நடை பராமரிப்பு பணி: சைக்கிள் ஓட்டியும், மாடு மேய்க்க கயிறுஅவிழ்த்தும் நேர்முகத்தேர்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கால்நடை பராமரிப்பு துறையில் பணியில்சேர கொளுத்தும் வெயிலிலும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வரிசையில் நின்று நேர்முகத்தேர்வில் பங்கேற்று வருகின்றனர்.  
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில், கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலி பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்து வருகிறது. இன்றுமுதல் துவங்கப்பட்டுள்ள நேர்முகத்தேர்வு வரும் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன சுழற்சி அடிப்படையில் 48 பணியாளர்கள் நிரப்பப்பட உள்ளனர். இப்பணிக்காக 5,906 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
image
image
image
இத்தேர்வில் கலந்துகொண்டவர்கள் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் வெளியே நீண்ட வரிசையில் வெயிலில் காத்து நிற்கின்றனர். 10ஆம் வகுப்பு கல்வித்தகுதி போதுமானதாக இருந்தாலும், அரசு வேலை என்பதால் முதுநிலை பட்டதாரிகள் வரையிலும் விண்ணப்பித்துள்ளனர். நேர்முக தேர்வில் கலந்து கொண்டுள்ள இளம்பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் சைக்கிள் ஓட்டும் திறன், கால்நடைகளை கையாளும் திறன், பொது அறிவு திறன் போன்றவை தேர்வு குழுவினரால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
image
image
பெரும்பாலும் தற்போதைய காலக்கட்டத்தில் சொகுசு வாகனம், கணினி பயன்பாடு, ஏசி அறைகளில் பணி என பலரும் மாறியுள்ள நிலையில், அரசு வேலை என்பதால் சைக்கிள் ஓட்டியும், பசு மாட்டை மேய்க்க கயிறு அவிழ்த்து மேய்ச்சலுக்கு கொண்டுசென்றும் நேர்முக தேர்வில் பங்கேற்று வருகின்றனர். இதில் ஒருசிலரின் கட்டுப்பாட்டை மீறி பசு மாடுகள் அவர்கள் மீது தாவுவதும், அவர்கள் ஓடுவதும் வேடிக்கையாக காணப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.