தடா சட்டப்பிரிவுகளின் கீழ் நளினி உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாரா?- நீதிமன்றம் கேள்வி

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுள்தண்டனை அனுபவிக்கும் எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஆளுநரிடமிருந்து கடந்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதியன்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலைசெய்ய 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு அனுப்பிய தீர்மானத்தில் ஆளுநர் தாமதிப்பதால், அவரது முடிவிற்காக காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வின் முன் நடைபெற்று வருகிறது. கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முன் கூட்டி விடுதலை செய்வது தொடர்பாக பேரறிவாளன் மட்டுமல்லாமல் ஏழு பேரின் ஆவணங்களையும் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் எந்த தேதியில் ஆளுநரிடமிருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது என தமிழக அரசு தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது.
image
இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, கடந்த ஆண்டு ஜனவரி 27-ல் ஆளுநர் அலுவலகத்திலிருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நளினி தரப்பில் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி நளினியின் மரணத் தண்டனை தமிழக அரசாலும், பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரணத் தண்டனை உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாகவும் மாற்றப்பட்டது என வாதிட்டார். அரசால் தண்டனை குறைப்பு செய்யப்பட்ட தன்னை விடுதலைசெய்ய அரசு முடிவெடுத்த பிறகு, அதற்கு ஒப்புதல் அளிக்காமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நாளும் சட்டவிரோத காவலில் இருப்பதாகத்தான் கருத வேண்டுமென வாதிட்டார்.
image
மேலும் தடா சட்டப்பிரிவுகளின் கீழ் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ள நிலையில், இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்? என ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தடா சட்டப்பிரிவுகளின் கீழ் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் நளினி உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாரா என, விளக்கமளிக்க நளினி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.