ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் – தேசத்துக்கான சுயாதீன வல்லுநர்கள் கோரிக்கை



மக்களின் கோரிக்கைகளை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என தேசத்துக்கான சுயாதீன வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முன்மொழிவுகளுடன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளதுடன், உடனடியாக எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்றும், இடைக்கால தேசிய அரசாங்கத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்மூலம் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சம எண்ணிக்கையிலான பிரதி அமைச்சர்களுடன் 18 அத்தியாவசிய இலாகாக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையும் உருவாக்கப்பட வேண்டும்.

இடைக்கால தேசிய அரசாங்கத்தின் காலத்தில் முன்னுரிமை என்ற வகையில், அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை இரத்துச் செய்வதற்கும், 19வது அரசியலமைப்புத் திருத்தத்தின் விதிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கும் தேவையான திருத்தங்களுடன் ஜனநாயக ஆட்சி முறைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்டவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.” என அறிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.