கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்த பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை:
முதலமைச்சரின் நிவாரண உதவி தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் மார்க்ரெட் தெரசா, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஆறுமுகம் என்ற நபர், உதவி ஆய்வாளரைக் கத்தியால் வெட்டியதையடுத்து, அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
அவரைத் தாக்கிய ஆறுமுகம் என்ற நபர், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெண் காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட செய்தியை அறிந்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இச்சம்பவத்தில் காயமுற்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் மார்க்ரெட் தெரசாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். 
அதோடு மட்டுமல்லாமல், மார்க்ரெட் தெரசாவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.