டி.கே.சிவகுமாருக்கு நெருக்கமான 16 இடங்களில் சோதனை: காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 28 தொகுதிகளில் ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

பெங்களூருவில் உள்ள 4 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று கர்நாடக துணை முதல்வரும் காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே. சிவகுமாருக்கு நெருக்கமான நண்பர்கள், ஆதரவாளர்கள் ஆகியோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் உட்பட 16 இடங்களில் சோதனை நடத்தினர்.

பெங்களூரு ஊரக தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கியுள்ள டி.கே.சிவகுமாரின் தம்பி டி.கே.சுரேஷை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

டி.கே.சுரேஷின் நெருங்கிய நண்பரும் முன்னாள் கவுன்சிலருமான கங்காதர் வீடு, அலுவலகம், உறவினர்களின் வீடுகள் ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 9 மணி வரை நீடித்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ரூ. 1 கோடியே 33 லட்சம் ரொக்க பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் 22 கிலோ 923 கிராம் தங்க நகைகள், வைரங்களையும் பறிமுதல் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.