விஐபிக்களின் பாதுகாப்பு அந்தஸ்து நீக்கம் – மாநில அரசு அதிரடி உத்தரவு!

பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என 184 பேருக்கு வழங்கிய வி.ஐ.பி.க்களுக்கான பாதுகாப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர்
பகவந்த் மான்
தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தனிநபர் என, 184 பேருக்கு வழங்கிய வி.ஐ.பி.க்களுக்கான பாதுகாப்பை,
ஆம் ஆத்மி அரசு
நீக்கி உத்தரவிட்டு உள்ளது. பாதுகாப்பு பற்றி மேற்கொண்ட மறு ஆய்வு அடிப்படையில் இந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்படுவதற்கு தொடர்புடைய அரசு நிர்வாகம் ஒப்புதல் வழங்கி உள்ளது என பாதுகாப்பிற்கான கூடுதல் டி.ஜி.பி. தெரிவித்து உள்ளார்.

இதன்படி, பல முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு உள்ளது. அவர்களில், முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, குர்தர்ஷன் பிரார், ஐ.பி.எஸ். குர்தர்ஷண் சிங் மற்றும் உதய்பீர் சிங் (முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவாவின் மகன்) ஆகியோரின் குடும்பத்தினர் அடங்குவார்கள்.

இதே போல், முன்னாள் கேபினட் அமைச்சர்கள் சுர்ஜித் சிங் ராக்ரா மற்றும் பிபி ஜாகிர் கவுர், தோட்டா சிங் (சிரோமணி அகாலி தளம் மோகா), முன்னாள் காங்கிரஸ் எம்.பி. வரீந்தர் சிங் பஜ்வா, சந்தோஷ் சவுத்ரி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. தீப் மல்கோத்ரா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டு உள்ளது.

இவர்கள் தவிர, ராஜேஷ் பாகா (பா.ஜ.க.வின் மாநில துணை தலைவர்), மஹி கில் (பா.ஜ.க.வின் நட்சத்திர பிரசார பேச்சாளர்), மற்றும் ஹரீந்தர் சிங் கோலி (மாவட்ட பா.ஜ.க. தலைவர்) ஆகியோருக்கான பாதுகாப்பும் நீக்கப்பட்டு உள்ளது. எனினும், உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் சிறப்பு உத்தரவின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட பாதுகாவலர்கள் வாபஸ் பெறப்படவில்லை. கடந்த மார்ச் 12 ஆம் தேதி, எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் என 122 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.