மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உரிமைகளை பல்கலை. நுழைவுத்தேர்வு மீறாது: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்

டெல்லி: ஒன்றிய பல்கலைக் கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவதை கைவிடக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வால் மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களின் உரிமை பாதிக்கப்படாது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ஒன்றிய அமைச்சர் கூறியிருப்பதாவது: ”தேசியக் கல்விக் கொள்கை 2020, பல்வேறு நிபுணர்களுடன் விரிவான மற்றும் அதிக பங்கேற்பு கலந்தாய்வு செயல்முறைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். அதன்படி, 2020 தேசிய கல்விக் கொள்கையின்படி, பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுப்பட்டியலில் கல்வி இருப்பதால் அதனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஒன்றிய பல்கலைக்கழகங்களில் 13 மொழிகளில் பொது நுழைவுத்தேர்வு எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாறாக, இந்த நுழைவுத்தேர்வு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உரிமையை பாதிக்காது. ஒரே விண்ணப்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியும், இதனால் ஏழை மாணவர்களின் நிதிச்சுமை குறையும். குறிப்பாக,கோச்சிங் சென்று பயிற்சி பெரும் முறையை ஒழிக்கும் நோக்கத்திற்காகவே பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது என்று விளக்கியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.