வாக்கிங் சென்ற ஓட்டல் உரிமையாளர் காரில் கடத்தல்.. போலீசில் சிக்கிய பின்னணி.!

வத்தலகுண்டு அருகே நடைப்பயிற்சிக்கு சென்ற ஓட்டல் உரிமையாளரை காரில் கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பாக 7 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்..

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் அன்புசெல்வம் இவருக்கும், சென்னையில் வசிக்கும், இவரது சகோதரர் அருள்நாயகம் என்பவருக்கும் இடையே, சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. குறிப்பாக வத்தலக்குண்டு பெரியகுளம் சாலையில் உள்ள 3 நட்சத்திர ஓட்டல் நடத்துவதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அன்புசெல்வம் வத்தலக்குண்டு – பெரியகுளம் பைபாஸ் சாலையில் நடைபயிற்சி சென்றபோது, ஒரு காரில் வந்து வழிமறித்த 7 பேர் கொண்ட கும்பல், கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி அன்புசெல்வத்தை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அன்புசெல்வத்தின் மகன் கிஷோர் , வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வத்தலகுண்டு போலீசார் தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.
சம்பவ இடத்தில் காணப்பட்ட செல்போன் டவர் சிக்னலை வைத்து, கடத்தப்பட்டவர்கள் விருதுநகர் அருகே மெய்குன்றம் என்ற இடத்தில் இருப்பதை கண்டறிந்து, அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், 7 பேர் கொண்ட கடத்தல் கும்பலை கைது செய்து ஓட்டல் உரிமையாளர் அன்புசெல்வத்தை பத்திரமாக மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, வத்தலகுண்டு வெள்ளைச்சாமி, விருதுநகர் பிரபாகரன், விஜய் மதுரை பழங்காநத்தம் பாலமுருகன், பேரையூர் திமுக இளைஞரணி செயலாளர் வடிவேல் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அருள் நாயகத்தின் தூண்டுதலினால் இந்த கடத்தல் சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.