சுங்கச்சாவடி ஊழியரை லாரி பம்பரில் 2 கி.மீட்டர் வரை தொங்கவிட்ட டிரைவர்- நடந்தது என்ன?

திருப்பதி:

ஆந்திரா மாநிலம் நந்தியால் மாவட்டம், டோன் மண்டலம், அம்மகட்டா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் உள்ளது. நந்தியாலில் இருந்து கர்னூல் நோக்கி ஒரு லாரி வந்து கொண்டு இருந்தது. அம்ம கட்டா டோல்கேட்டிற்கு வந்த லாரியை அங்கிருந்த ஊழியர்கள் பாஸ்ட் டேக்கை ஸ்கேன் செய்தனர்.

அப்போது பாஸ்ட் டேக் சரிவர ஸ்கேன் ஆகவில்லை. இதையடுத்து டோல்கேட் ஊழியர் சீனு என்பவர் ஸ்கேனர் கொண்டு லாரி முன்பாக ஒட்டப்பட்டுள்ள பாஸ்ட் டேக்கை ஸ்கேன் செய்தார். அதற்குள் டோல்கேட்டில் உள்ள தடுப்பு திறந்து கொண்டது. டோல்கேட் ஊழியர் சீனு பாஸ்ட் டேக்கை ஸ்கேன் செய்வதை கவனிக்காத டிரைவர் லாரியை ஓட்டிச் சென்றார்.

லாரி முன்பாக இருந்த டோல்கேட் ஊழியர் லாரி திடீரென ஓட்டிச் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்து லாரி முன்பாக இருந்த பம்பரை கெட்டியாக பிடித்து கொண்டு சத்தமிட்டார். லாரி வேகமாக சென்றதால் சீனு சத்தமிடுவது லாரி டிரைவருக்கு கேட்கவில்லை. டோல்கேட் ஊழியர் பம்பரில் தொங்கி செல்வதைக் கண்ட வாகன ஓட்டிகள் பைக்கில் லாரியை துரத்தி சென்றனர்.

அதற்குள் லாரி 2 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து விட்டது. பைக்கில் லாரியை துரத்திச் சென்றவர்கள் டிரைவரிடம் பம்பரில் டோல்கேட் ஊழியர்கள் தொங்கி செல்வதாக தெரிவித்தனர். உடனடியாக லாரியை நிறுத்திய டிரைவர் டோல்கேட் ஊழியர் லாரியின் முன்பாக இருப்பது தனக்கு தெரியவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து டோல்கேட் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஊழியர் சீனுவை பத்திரமாக மீட்டுச் சென்றனர். லாரி முன்பாக உள்ள பாஸ்ட் டேக்கை ஸ்கேன் செய்த ஊழியர் 2 கிலோமீட்டர் தூரம் லாரி முன்பாக தொங்கிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.