சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. இரண்டு பாகங்களாக உருவாகி, இதன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் அல்லு அர்ஜுனின் நண்பர்களில் ஒருவராக அவரது வலதுகரமாக கேசவா என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் ஜெகதீஷ் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு துணை நடிகை தற்கொலையில் இவர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்து இரண்டாவது பாகத்திலும் நடித்து வந்தார்.

கேசவா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஜெகதீஷுக்கு முன்பாகவே நாங்கள் நினைத்து வைத்திருந்தது நடிகர் சுகாஸ் என்பவரை தான் என புதிய தகவல் ஒன்றை தற்போது கூறியுள்ளார் இயக்குனர் சுகுமார். வளர்ந்து வரும் இளம் நடிகரான சுகாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பிரசன்ன வதனம் என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சுகுமார், அங்கே பேசும்போது இந்த தகவலை கூறினார்.

மேலும், “சுகாஸின் வளர்ச்சியை நான் கண்கூடாக பார்த்து வருகிறேன். அடுத்த நானி என்று அவரை தாராளமாக சொல்லலாம். அது மட்டுமல்ல அல்லு அர்ஜுனுக்கும் சுகாஸை ரொம்பவே பிடிக்கும். கேசவா கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைக்கலாம் என்றுதான் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் அப்போதுதான் அவர் சில படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமாகி நடிக்க துவங்கியிருந்தார். இந்த சமயத்தில் இப்படி வேறு துணை கதாபாத்திரத்திற்காக அவரை அழைத்து நடிக்க வைத்தால் அது தவறான முடிவாக போய்விடும் என்பதால் தான் அவருக்கு பதிலாக நடிகர் ஜெகதீஷை ஒப்பந்தம் செய்தோம்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.