10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் அனுப்பும் பணி தீவிரம்: கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவு

சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், தேர்வுக்கான வினாத்தாள் அனுப்பும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு, மே 5 முதல் 28-ம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு மே 10 முதல்31-ம் தேதி வரையும், 10-ம் வகுப்புக்கு மே 6 முதல் 30-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன.

3,936 தேர்வு மையங்கள்

இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்வுப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மொத்தம் 3,936 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, கட்டுக்காப்பு மையங்களுக்கு விடைத்தாள்கள் ஏற்கெனவே அனுப்பப்பட்டு விட்டன.

அதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள 300-க்கும் மேலான கட்டுக்காப்பு மையங்களுக்கு வினாத்தாள்கள் தற்போது பாதுகாப்பாக அனுப்பப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் மூலம் 800-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் வாயிலாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் அனைத்து மையங்களுக்கும் வினாத்தாள்கள் சென்றடைந்துவிடும்.

இதையடுத்து வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்குத் தேவையான வசதிகளை மாவட்டக்கல்வி அதிகாரிகள் ஏற்படுத்தி, கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், காவலர் மற்றும் அலுவலக அதிகாரிகள் தினமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.