பிரதமரின் கூட்டத்தில் அலட்சியமாக அமர்ந்திருந்ததாக கெஜ்ரிவால் மீது பா.ஜ.க. விமர்சனம்

புதுடெல்லி :

நாட்டில் கொரோனா சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக காணொலி வாயிலாக மாநில முதல்-மந்திரிகளின் கூட்டத்தை பிரதமர் மோடி நேற்று நடத்தினர்.

அப்போது டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அலட்சியமாக அமர்ந்திருந்ததாக பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. கைகளை தலைக்கு பின்னால் வைத்தபடி கெஜ்ரிவால் அமர்ந்திருக்கும் வீடியோவுடன் ஒரு டுவிட்டர் பதிவை பா.ஜ.க. தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் அமித் மாளவியா வெளியிட்டுள்ளார். அதில், ஒழுங்கற்ற நடத்தையால் கெஜ்ரிவால் தொடர்ந்து தன்னைத்தானே தரம் தாழ்த்திக்கொண்டு வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முக்கியமான கூட்டத்தில் முதல்-மந்திரி ஒருவர் இப்படித்தான் நடந்துகொள்வாரா? அவருக்கு போரடித்துவிட்டதா அல்லது நடத்தை ஒழுங்கில்லையா? அல்லது இரண்டுமே காரணமா என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனாவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி பா.ஜ.க. ஊடகப்பிரிவு தலைவர் நவீன்குமார் ஜிண்டால், ‘இந்த மனிதருக்கு, பிரதமருக்கு முன்னால் எப்படி அமருவது என்று கூடத்தெரியவில்லை’ என தாக்கியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.