இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்கில், அவருக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து, அவர் குற்றமற்றவர் என்பதை சட்டப்படி நிரூபிக்க வாய்ப்பளிப்பது குறித்து, அந்நாட்டின் புதிய அரசு பரிசீலித்து வருகிறது.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டதை அடுத்து, 2017ல் அவரை பதவி விலக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் இரு ஊழல் வழக்குகளில், 2018ல் அவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. லாகூரின் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்ட நவாஸ் ஷெரீபுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நான்கு வார காலம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள, 2019ல் அவருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப், அதன் பின் நாடு திரும்பவில்லை. பாகிஸ்தானில், இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்து, நவாசின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு சமீபத்தில் பொறுப்பேற்றது.
இதையடுத்து, நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்ப, 10 ஆண்டுகள் செல்லுபடியாக கூடிய புதிய பாஸ்போர்ட்டை புதிய அரசு சமீபத்தில் வழங்கியது.இந்நிலையில், பாக்., உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா கூறியதாவது: பாக்., சட்டப்படி, குற்றவாளிக்கு தவறாக தண்டனை வழங்கப்பட்ட வழக்கில், அந்த தண்டனையை ரத்து செய்து தான் குற்றமற்றவர் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும்.
இதற்காக, குற்றம்சாட்டப்பட்டவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் அதிகாரம் பாக்., அரசு மற்றும் பஞ்சாப் மாகாண அரசுக்கு உள்ளது.இதன் அடிப்படையில், நவாஸ் ஷெரீபுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்துவிட்டு, அவர் குற்றமற்றவர் என்பதை சட்டப்படி நிரூபிக்க மீண்டும் வாய்ப்பு வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.இவ்வாறு கூறினார்.
Advertisement