புதுடெல்லி: இந்தியா – ஜெர்மனி இருநாடுகளுக்கு இடையில் வேளாண் சூழிலியல் மற்றும் இயற்கை வளங்களுக்கான நீடித்த மேலாண்மையில் கூட்டு பிரகடனம் கையெழுத்தாகி உள்ளது.
இதுகுறித்து இந்திய விவசாய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளாண் சூழலியல் மற்றும் இயற்கை வளங்களுக்கான நீடித்த மேலாண்மையில் இந்தியா- ஜெர்மனி இடையே பல்வேறு முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஜெர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்வெஞ்சா சுல்சேவும், இன்று திங்கள்கிழமை காணொலி வாயிலாக பிரகடனம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.
இந்த கூட்டு ஆராய்ச்சி, இரு நாடுகளையும் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், விவசாயிகளிடையே, அறிவாற்றலை பகிர்ந்து கொள்ளுதல், புதுமை முயற்சிகள் ஊக்குவிக்கப்படும். தொழில்நுட்ப மாற்றம், அறிவியல் ஆற்றல் ஆகியவை, பரிமாற்றங்கள், ஒத்துழைப்புகள் மற்றும் தனியார் துறை உடனான கூட்டு ஆராய்ச்சி போன்றவை ஊக்குவிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் 2025-க்குள் நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பாக, ஜெர்மன் அரசின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் 300 மில்லியன் யூரோக்களை வழங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.