காங்கோ: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையில் காங்கோ அரசு ஈடுபட்டுள்ளது.
காங்கோவில் உள்ள ஈக்வடார் மாகாணத்தில் பண்டகா பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி, ஒருவருக்கு எபோலா வைரஸ் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. எபோலா தாக்கிய நபர் ஏப்ரல் 21 ஆம் தேதி உயிரிழந்தார். இதனை காங்கோவின் சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதிச் செய்துள்ளது. எபோலாவால் உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்த 267 பேர் கண்டறிந்துள்ளனர்.
தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தடுப்பூசிகளையும் காங்கோ அரசு செலுத்தி வருகின்றது.
எபோலா கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?- 1976-ல் எபோலா எனும் நதிக்கரையில் உள்ள யம்புக்கு எனும் குக்கிராமத்தில் பேராசிரியர் ஜேக்கஸ் முயும்பே தொற்றுநோய் ஆராய்ச்சியாளராக இருந்தார். அப்போது ஒரு கன்னியாஸ்திரிக்கு வினோதமான நோய் ஏற்பட்டிருப்பதாக கூறி ஜேக்கஸ் அழைக்கப்பட்டார். அவரது உடலில் இருந்து ரத்த மாதிரிகளை ஜேக்கஸ் சேகரித்தார். அந்த ரத்தத்தைப் பரிசோதித்தபோது அது எபோலா வைரஸ் என்பது உறுதியானது. எபோலா நதிக்கரையோர கிராமத்தில் கண்டறியப்பட்டதால் அந்த வைரஸுக்கு எபோலா அப்பெயர் வழங்கப்பட்டது.
எபோலா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்துவிட்டது. எபோலா வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை 15000 பேர் இந்நோய்க்கு உயிரிழந்துள்ளனர். எபோலா பாதித்தால் காய்ச்சல், வாந்தி, ரத்தப்போக்கு, வயிற்றோட்டம் ஏற்படும். 2013 முதல் 2016 வரை எபோலா மேற்கு ஆப்பிரிக்காவைக் கடுமையாக அச்சுறுத்தியது. சுமார் 11,000 பேர் இந்தக் காலகட்டத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதைய சூழலில் எபோலா தொற்று ஏற்பட்டால், அந்தப் பகுதியை உடனடியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அங்குள்ள மக்களுக்கு எபோலா பரிசோதனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும் மற்றவர்களுக்கு தடுப்பூசியும் செலுத்துவதன் மூலம் எபோலா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.