லக்னோ:
தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மூத்த தலைவர்களுடன் பலமுறை ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற பல்வேறு திட்டங்கள் அடங்கிய அறிக்கையினை வழங்கினார். அவரது யோசனை படி காங்கிரசில் அதிரடி நடவடிக்கை எடுக்க சோனியா காந்தி முடிவு செய்தார்.
இந்த நிலையில் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதற்கான முயற்சியும் நடந்தது.
இதற்கு சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவியது. இந்த நிலையில் காங்கிரசில் சேரும் எண்ணம் எதுவும் இல்லை என பிரசாந்த் கிஷோர் தெரிவித்ததால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் அவர் தனது சொந்த மாநிலமான பீகாரில் இன்று புதிய அரசியல் பயணத்தை தொடங்குவார் என பேச்சு அடிப்பட்டது. இதனால் அவர் புதிய அரசியல் கட்சி தொடங்குவாரா அல்லது புதிய இயக்கம் தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இன்று இது பற்றி அவரிடம் நிருபர்கள் கேட்டனர்.