வேப்பேரி தொழில் அதிபர் வீட்டில் ரூ.1 கோடி நகைகளை சுருட்டிய வேலைக்காரன்

சென்னை:

வேப்பேரி ஈ.வெ.கி. சம்பத் சாலை பகுதியில் வசித்து வருபவர் விகாஷ். தொழில் அதிபரான இவரது வீட்டில் பீகாரைச் சேர்ந்த கரண் என்ற வாலிபர் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி வீட்டை விட்டு சென்ற கரண் நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறி வெளியேறினார். ஆனால் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தொழில் அதிபர் விகாஷ் வீட்டில் இருந்த நகைகளை ஆய்வு செய்தார். அப்போது ரூ. 1 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.

ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளை வீட்டில் வேலை செய்த கரண் சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்திருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் கரண் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதில், போலீசுக்கு சென்றால் அந்தரங்க வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று கரண் மிரட்டல் விடுத்துள்ளான். இது தொடர்பாக வேப்பேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நகையுடன் தப்பிய கரண் சொந்த மாநிலமான பீகாருக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து தனிப்படை போலீசார் கரணை பிடிக்க முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில் வேப்பேரி உதவி கமிஷனர் அரிகுமார் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.