மாணவியிடம் அத்துமீறி விட்டு தப்பி ஓடிய இளைஞர்…4 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று மடக்கி பிடித்த சக மாணவர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கல்லூரி மாணவியிடம் அத்துமீறிவிட்டு காரில் தப்பியோட முயன்ற நபரை, சக மாணவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது.

தனியார் கல்லூரியில் பயின்று வந்த அந்த மாணவி, தனது நண்பர்களுடன் கல்லூரிக்கு அருகேயுள்ள ஹோட்டலில் உணவருந்தியுள்ளார். அப்போது, பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்த நேக்காமண்டபத்தைச் சேர்ந்த ஸ்பார்ஜன் என்ற நபர் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

முதலில் இதனை கண்டுகொள்ளாத மாணவி, இயற்கை உபாதை கழிக்க கழிவறைக்கு சென்றிருக்கிறார். அப்போதும் பின் தொடர்ந்து சென்ற அந்த நபர் தகாத முறையில் நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இது குறித்து மாணவி நண்பர்களிடம் கூறவே, அவர்கள் அந்த நபரிடம் தட்டிக் கேட்டிருக்கின்றனர்.

ஆனால், அந்த நபர் ஆபாச வார்த்தைகளால் பேசி இவர்களை கீழே தள்ளிவிட்டுவிட்டு காரில் தப்பி செல்ல முயன்றிருக்கிறார். உடனடியாக பைக்கிலேயே காரை பின் தொடர்ந்து சென்ற மாணவர்கள், பார்வதிபுரம் அருகே காரை தடுத்து நிறுத்தி ஆத்திரத்தில் கண்ணாடியை உடைத்து நொறுக்கினர்.

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததோடு, அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.