கொழும்பு-இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க, அதிபர் கோத்தபய ராஜபக்சே விடுத்த அழைப்பை ஏற்க, முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜனா பாலவேகயா மறுத்துள்ளது.
இந்த விவகாரத்தில், அரசுக்கு, எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி உள்ளது. இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகக் கோரி, பொதுமக்கள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்
.நாட்டில் மீண்டும் அவசர நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் அறிவித்தார். பிரதமர் பதவியில் இருந்து, மகிந்த ராஜபக்சே எந்த நேரத்திலும் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், இடைக்கால அரசு அமைக்க வரும்படி, முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகயா கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு, அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், அதை ஏற்க சஜித் பிரேமதாசா மறுத்து உள்ளார்.இது குறித்து, சமகி ஜன பாலவேகயா கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திசா அட்டநாயகே கூறியதாவது:கட்சித் தலைவர் பிரேமதாசா மற்றும் கட்சியின் பொருளாதார நிபுணரான ஹர்ஷா டிசில்வா ஆகியோருடன், அதிபர் கோத்தபய ராஜபக்சே தொலைபேசி வாயிலாக பேசினார்.இடைக்கால அரசு அமைக்கும்படி அவர் அழைப்பு விடுத்தார். ஆனால், அதை ஏற்க எங்கள் தலைவர்கள் மறுத்துஉள்ளனர். ராஜபக்சே சகோதரர்கள் அரசில் இணைய முடியாது என்று, பிரேமதாசா ஏற்கனவே தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.
நிபந்தனை என்ன?இடைக்கால அரசு அமைக்க ஆதரவு அளிக்க வேண்டுமானால், குறிப்பிட்ட சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என, எதிர்க்கட்சி தரப்பில் அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதன்படி, ‘அதிபரின் கீழ் நிர்வாகம் நடக்கும் நடைமுறையை, 18 மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும். அதிபருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். பார்லிமென்டை விட அதிபருக்கு அதிக அதிகாரம் கிடைக்க வகை செய்யும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று, புத்த கோவில் வழிபாட்டுக்காக அனுராதபுரத்துக்கு வந்த பிரதமர் மகிந்த ராஜபக்சேவை, ஏராளமான போராட்டக்காரர்கள் வழி மறிக்க முயன்றனர். பிரதமருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதனால், பரபரப்பு ஏற்பட்டது.ஆலோசனை கேட்கிறது ராணுவம்நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ராணுவ வீரர்களுக்கான விடுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும், உடனடியாக பணியில் சேரும்படியும், ராணுவ அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு மற்றும் போராட்டங்களுக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளை வழங்கும்படி, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.