தமிழகத்திலயே முதல் முறையாக… மதுரை மேயருக்கு ஆலோசகர் – மாநகராட்சியில் கிளம்பிய எதிர்ப்பு குரல்

மதுரை மாநகர, மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை மீறி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சிபாரிசில் பகுதி செயலாளர் பொன் வசந்தின் மனைவி இந்திராணி மதுரை மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

மாமன்றக் கூட்டம்

இந்திராணி மேயராக நியமிக்கப்பட்டது கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தி வந்த நிலையில் அவரை சுயமாக செயல்படவிடாமல் கணவர் பொன் வசந்தே ஆக்டிங் மேயராக செயல்படுவதாக புகார் எழுந்தது.

இதனிடையே கடந்த பட்ஜெட் கூட்டத்தில் ஊடகத்தினர் மீது மேயர் தரப்பினர் தாக்குதல் நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எதிர்ப்பு கோஷமிட்ட அ.தி.மு.க உறுப்பினர்கள்

அது மட்டுமில்லாமல் அமைச்சர் பழனிவேல் தியாகாரஜன் அலுவலகத்தில் பணியாற்றிய அர்ச்சனா என்பவர், மேயர் இந்திராணி எங்கு சென்றாலும் நிழல்போல் உடன் வருவதும், மேயர் அறையில், அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் சர்ச்சையானது. அது மட்டுமில்லாமல் பத்திரிகையாளர்களை மாமன்ற கூட்டங்களில் அனுமதிப்பதிலும் பல பிரச்னைகள் எழுந்தது.

மேயரின் செயல்பாட்டை அமைச்சர் கண்காணிக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில், அரசு பதவியில் இருக்கும் மேயருடன் விதிகளை மீறி ஒருவர் செயல்படுவதும், கோப்புகளை பார்ப்பதும், ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல் என்ற விமர்சனமும் எழுந்தது.

மேயர் இந்திராணி

இந்த நிலையில்தான் மாமன்ற கூட்ட அஜெண்டா 4-ல், ‘மதுரை மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் சிறப்பு ஆலோசகர் ஒருவரை நியமனம் செய்திட மாண்புமிகு மேயர் கேட்டுக்கொண்டுள்ளார். மேயர் அவர்களின் அன்றாட பணிகளுக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனைகள் வழங்குதல் மாநகராட்சி கொள்கைகள், செயல்முறை மற்றும் திட்டங்கள் குறித்து மேயருக்கு ஆலோசனை வழங்குதல், ஆய்வுகள் தணிக்கைகள் மற்றும் கூட்டங்கள் ஆகியவற்றில் மேயர் அவர்களுடன் கலந்து கொள்ளுதல், அரசுத் துறை மற்றும் உயர் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்களுடன் பணிகள் தொடர்பான மேயர் தெரிவிக்கும் தகவல்களை வழங்கி தகவல் பரிமாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொள்வார் எனவும், ஊதியமோ மாநகராட்சிக்கு செலவினமோ ஏதும் இன்றி அவரை நியமனம் செய்யலாம் எனவும், இந்நியமனத்திற்கு பொருத்தமானவராக செல்வி. அ. அர்ச்சனா தேவி, M.A. (Public Policy) என்பவரை நியமனம் செய்திட மேயர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில், அவரை இப்பொறுப்பில் ஐந்து ஆண்டுகள் வரை அல்லது மேயரின் பதவி காலத்தில் மேயர் விரும்பும் காலம் வரை இவற்றில் எது முந்தையதோ அதுவரை நீடிக்கலாம் என்ற நிபந்தனையுடன், ஊதியமோ மாநகராட்சிக்கு செலவினமோ ஏதும் இன்றி நியமனம் செய்வதற்கு மாமன்றத்தின் ஒப்புதலை கோருவதாக’ குறிப்பிட்டுள்ளனர்.

இப்படி தனிப்பட்ட நபரை மேயரின் ஆலோசகராக எந்த மாநகாராட்சியிலும் நியமிக்கப்படவில்லை என்று தி.மு.க-அ.தி.மு.க மாமன்ற உறுப்பினர்கள் ஆதங்கப்பட்டனர்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.கவைச் சேர்ந்த மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, “எங்களுடைய எந்த கோரிக்கைகளையும் கேட்கவில்லை. வரியை குறைக்க சொன்னோம். அதையும் கேட்கவில்லை. இப்போது மேயருக்கு ஆலோசகர் நியமிக்கப்படுவதை இப்போதுதான் கேள்விப்படுகிறோம். இதுக்கு முன் இங்கிருந்த எந்த மேயரும் ஆலோசகர் வைத்துக் கொண்டதில்லை.” என்றார்.

மாமன்றக் கூட்டம்

இதற்கிடையே மனு அளித்தும் தனக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என்று மாநகர தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியும் மாமன்ற உறுப்பினருமான ஜெயராம் புகார் எழுப்பியதும் அவருக்கு ஆதரவாக சில மாமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகராட்சியில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் சர்ச்சைகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.