புதுடில்லி : தலைமை தேர்தல் ஆணையரும், தேர்தல் ஆணையரும், சிக்கன நடவடிக்கையாக தங்களுக்கு வழங்கப்படும் ஊக்கச் சலுகைக்கான வரி விலக்கு, சுற்றுலா பயணப் படி ஆகியவற்றை ஏற்க மறுத்துள்ளனர்.
கடந்த வாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் பதவியேற்ற பின், நேற்று முதன் முறையாக ஆணையத்தின் கூட்டம் டில்லியில் நடந்தது. இதில், தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் ஊக்கச் சலுகைகள், பயணப் படி கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது சிக்கன நடவடிக்கைகளில் ஒன்றாக, தங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு படிகளுக்கு வரி விலக்கு தேவையில்லை என, ராஜிவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் தெரிவித்தனர். அத்துடன், ஆண்டுக்கு மூன்று முறை வழங்கப்படும் குடும்பச் சுற்றுலா பயணப் படியை ஒரு முறை மட்டுமே வழங்கினால் போதும் எனவும் அவர்கள் கூறினர்.
அவர்களின் இந்த கோரிக்கைகள் மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது. தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு, சிறப்பு படிகளாக மாதம், 34 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
Advertisement