புவனேஸ்வர் : இரண்டு ஆண்டுகளாக கணவன் வீடு திரும்பாததால், அவர் இறந்து விட்டதாக கருதி இறுதிச்சடங்கு செய்து முடித்த நிலையில், கணவன் வீடு திரும்பியதால், தம்பதிக்கு மறுமணம் செய்து வைக்கப்பட்டது.
ஒடிசாவின் போரிகும்பா கிராமத்தைச் சேர்ந்தவர் அமானத்யா, 49. கூலித் தொழிலாளியான இவருக்கு சுபர்ணா என்பவருடன் 25 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த 2020ல் வேலைக்காக ஆந்திராவின் திருப்பதிக்கு சென்ற அமானத்யா ஊர் திரும்பவில்லை. அவரைப்பற்றிய தகவல் எதுவும் தெரியாததால், அவர் இறந்து விட்டதாக கருதி குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்தனர்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன், அமானத்யா வீடு திரும்பவே, அவரது மனைவி இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
ஆனால், விதவைக் கோலத்தில் இருக்கும் சுபர்ணாவுடன் சேர்ந்து வாழ, அவரது குடும்பத்தினரும், ஊர் மக்களும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், சுபர்ணாவை அமானத்யா மீண்டும் திருமணம் செய்தால் இருவரும் சேர்ந்து வாழலாம் என ஊர் தலைவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, இருவருக்கும் மீண்டும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. மறுமணம் குறித்து சுபர்ணா கூறுகையில், ”காணாமல் போன கணவருக்கு, குடும்பத்தினரின் கட்டாயத்தால் இறுதிச் சடங்கு செய்த போது வருந்தினேன். அவர் இறந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. கடவுள் அருளால், என் கணவர் திரும்பி வந்து விட்டார். மீண்டும் அவருடன் மகிழ்ச்சியாக வாழ்வேன்,” என்றார்.
Advertisement