பஞ்சாப் சுகாதார அமைச்சர் டிஸ்மிஸ் – முதல்வர் பகவந்த் மான் அதிரடி!

ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, பஞ்சாப் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் சிங்லாவின் பதவியை பறித்து, அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான
ஆம் ஆத்மி
கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 90-க்கும் மேற்பட்ட இடங்களில், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக பதவி ஏற்றதுமே, அமைச்சர்கள் பற்றி ஊழல் புகார் தெரிவிக்கலாம் என்றும், அது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்து இருந்தார். மேலும் இது தொடர்பாக, வாட்ஸ் அப் எண்களையும் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, பஞ்சாப் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் சிங்லாவின் பதவியை பறித்து, அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அரசு ஒப்பந்தங்களில் 1 சதவீத கமிஷன் வழங்க வேண்டும் என அமைச்சர்
விஜய் சிங்லா
, அதிகாரிகளை நிர்ப்பந்தித்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, விஜய் சிங்லாவின் அமைச்சர் பதவியை முதலமைச்சர் பகவந்த் மான் பறித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி எம்பி ராகவ் சாதா, சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ஊழலின் அடிப்படையில் தங்கள் சொந்தக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நேர்மையும், துணிச்சலும், நேர்மையும் கொண்ட ஒரே கட்சி ஆம் ஆத்மி கட்சி தான். டெல்லியில் பார்த்தோம், இப்போது பஞ்சாபில் பார்க்கிறோம். பஞ்சாப் முதல்வரின் பாராட்டுக்குரிய முடிவு” என தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.