விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 சிறுவர் உட்பட 7 பேர் மீது 1,612 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் 806 பக்க குற்றப் பத்திரிகையையும், சிறுவர்கள் 3 பேர் மீது விருதுநகரில் உள்ள இளைஞர் நீதிக் குழுமத்தில் 806 பக்க குற்றப் பத்திரிகையையும் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர்.

விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு தொடர்ந்து 8 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சிலர்மீது புகார் வந்தது. இதுதொடர்பாக கடந்த மார்ச்சில் விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் (27), அவரது நண்பரான ஜூனத் அகமது (27), ரோசல்பட்டியைச் சேர்ந்த பிரவீன் (26), மாடசாமி (37) மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேரை விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் தமிழக அரசு உத்தரவின்படி இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸாருக்கு கடந்த மார்ச் 24-ம் தேதி மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் சிபிசிஐடி போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப் பதிவு செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட ஹரிஹரன் உட்பட 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், மதுரையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட 4 சிறுவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதையடுத்து, விசாரணையை சிபிசிஐடி போலீஸார் துரிதப்படுத்தினர்.

சிறுவன் விடுவிப்பு

இதனிடையே, இவ்வழக்கில் தொடர்புடைய 15 வயதுடைய சிறுவன் கடந்த 11-ம் தேதி விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் நிஷாந்தினி முன்னிலையில் ஆஜராகி, பூட்டிய அறையில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் வாக்குமூலம் அளித்தார். அப்போது, தனக்கு இவ்வழக்கில் தொடர்பு இல்லை என்றும், தன்னை இணைத்து பொய்யாகவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கும்படியும் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அந்த சிறுவன் வழக்கின் குற்றவாளி பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

ஹரிஹரன், ஜூனத் அகமது, பிரவீன், மாடசாமி ஆகியோர் மீது 806 பக்க குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாத் முன்னிலையில் சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி தலைமையிலான போலீஸார் நேற்று தாக்கல் செய்தனர்.

4 சிறுவர்களில் 15 வயது சிறுவன் ஒருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து மற்ற 3 சிறுவர்கள் மீது 806 பக்க குற்றப்பத்திரிகையை விருதுநகர் சூலக்கரையில் உள்ள இளைஞர் நீதிக் குழுமத்தில் நீதித்துறை நடுவர் கவிதா முன்னிலையில் சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி தலைமையிலான போலீஸார் நேற்று தாக்கல் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.