வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் ஜப்பானிய பிரதித் தூதுவருடன் சந்திப்பு

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதில் இருதரப்பு ஈடுபாடுகள், உள்நாட்டு அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் உதவிகள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜப்பான் பிரதித் தூதுவர் கட்சுகி கோட்டாரோ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மே 27ஆந் திகதி சந்தித்தார்.

குறிப்பாக கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது ஜப்பான் அரசாங்கம் வழங்கிய தாராளமான உதவி மற்றும் ஆதரவைப் பாராட்டிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், இலங்கையின் பொருளாதார சவால்களைத் தணிக்க இருதரப்பு மற்றும் பலதரப்பு வழிகளின் மூலம் ஜப்பானிடம் தொடர்ந்து ஆதரவைக் கோரினார். சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்ததைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் பரிஸ் கிளப் கடன் வழங்குநர்கள், ஜி 7 நாடுகள் மற்றும் ஏனைய கடன் வழங்குநர்களிடமிருந்து உதவியைப் பெறுவதாக அமைச்சர் பீரிஸ் விளக்கினார்.

இலங்கையுடன் சர்வதேச சமூகம் தொடர்ந்து ஈடுபடுவதே பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான திறவுகோல் எனக் குறிப்பிட்ட இரு தரப்பினரும் மேலும் ஒத்துழைப்பை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த நிலையில், இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு நிலையான தீர்வுகளைக் காண்பதில் ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவை ஜப்பான் தூதுவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஜப்பான் தூதரகத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 மே 31

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.