மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது: 6 இடங்களுக்கு 13 பேர் மனு தாக்கல்; இன்று பரிசீலனை

சென்னை: தமிழகத்தில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு, அரசியல் கட்சி களின் வேட்பாளர்கள் 6 பேர் உட்பட 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஜூன் 1) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன.

தமிழகத்தில் இருந்து தேர்வான 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன்10-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் இந்த தேர்தல் நடைபெறுவதால், 6-ல் 4உறுப்பினர் பதவிகள் திமுகவுக்கும், 2 அதிமுகவுக்கும் கிடைத்துள்ளன. திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒருஉறுப்பினர் பதவியை ஒதுக்கியுள்ளது. அதிமுக சார்பில் 2 பேர் போட்டியிடுகின்றனர்.

திமுக சார்பில் எஸ்.கல்யாணசுந்தரம், இரா.கிரிராஜன், ராஜேஷ்குமார், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம், அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதுதவிர, சுயேச்சைகளாக பத்மராஜன், அக்னி ராமச்சந்திரன், மன்மதன், சுந்தரமூர்த்தி, கந்தசாமி, வேல்முருகன் சோழகனார், தேவராஜன் ஆகிய 7 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது.

இறுதியாக, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 6, சுயேச்சைகள் 7 என 13 பேர் களத்தில்உள்ளனர். இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை, வேட்பாளர்கள் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலரான பேரவைச் செயலர் கி.சீனிவாசன் தலைமையில் நடைபெறுகிறது.

வேட்புமனுவுடன், பிரமாணப் பத்திரம், வைப்புத்தொகை, 10 சட்டப்பேரவை உறுப்பினர்களின் முன்மொழிவுக் கடிதம் அளிக்கப்பட வேண்டும். முன்மொழிவுக் கடிதம்இல்லாதபட்சத்தில் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும். இன்று நடைபெறும் வேட்பு மனு பரிசீலனையின்போது, வேறு தகுதியான வேட்புமனுக்கள் இல்லாவிட்டால், தேர்தல் நடத்தப்படாது.

திமுக, அதிமுக, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. வரும் ஜூன் 3-ம்தேதி மாலை 3 மணிவரை வேட்புமனுக்களை திரும்பப்பெற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்று மாலை இறுதி அறிவிப்பு வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.