Prashant Kishor: காங்கிரசுக்கு பெரிய கும்பிடு போட்ட பிரசாந்த் கிஷோர்!

காங்கிரஸ் கட்சியில் ஒருபோதும் சேர மாட்டேன் என, தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார்.

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மத்திய பாஜக அரசை எதிர்த்து, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இணைந்து செயல்பட உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், அவரும், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மூத்தத் தலைவர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, காங்கிரஸ் கட்சியின் உட்கட்டமைப்புகளை மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய ஆலோசனைகளை அவர் கூறினார். எனினும், காங்கிரஸ் தலைவர்கள் இதை ஏற்க மறுத்தனர். இதனால் அதிருப்தி அடைந்த அவர், காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதில்லை என்றும், அக்கட்சிக்கு சரியான தலைமை வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2015 ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலும், 2017 ஆம் ஆண்டில், பஞ்சாப் மாநிலத்திலும் வெற்றி பெற்றோம். 2019 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியும் வெற்றி பெற்றார். தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திலும் வெற்றி பெற்றோம். கடந்த 11 ஆண்டுகளில் ஒரு தேர்தலில் மட்டுமே தோல்வி கிடைத்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும் தான் தோல்வி அடைந்தோம்.

இதனால், காங்கிரஸ் கட்சியில் ஒருபோதும் சேர மாட்டேன் என முடிவு செய்தேன் என கையெடுத்து கும்பிட்டபடி கூறிய பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் ஒருபோதும் செயல்படாத கட்சி. தற்போதைய தலைவர்கள், இறங்கி அனைவரையும் கூட்டி செல்வார்கள். அப்படி சென்றால், நானும் மூழ்கி விடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.