நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்- ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். ஆளுநருடனான இந்தச் சந்திப்பின் போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநர் ரவியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வலியுறுத்தினார்.

மேலும்,  மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவு, 2022-க்கு  ஒப்புதல் வழங்கிட வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தினார்.  

இந்தச் சந்திப்பின் தொடக்கத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததற்காக ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.  

அதோடு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு, 1983, தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமை சட்டமுன்வடிவு, 2022, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022, உள்ளிட்ட 21 சட்டமுன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்..
மக்களுக்கு பயனளிக்கும் எனில் புதிய யுக்திகள் நடைமுறைப்படுத்த வேண்டும்- அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.