களத்தில் என்னுடைய நேரத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன் – ஆட்டநாயகன் சூர்யகுமார் யாதவ்

மும்பை,

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 174 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 102 ரன்கள் அடித்தார். இதையடுத்து சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது, இதை நான் நீண்ட நேரம் கழித்து செய்கிறேன். 14 டிசம்பருக்குப் பின் இப்போட்டியில் தான் முழுமையாக 20 ஓவர்கள் பீல்டிங் செய்து 18 ஓவர்கள் பேட்டிங் செய்தேன். அதனால் கொஞ்சம் சோர்வு இருந்தது. மற்றபடி எந்த பிரச்சினையும் இல்லை.

அந்த நேரத்தில் நான் மும்பை அணிக்கு தேவைப்பட்டேன் என்று கருதினேன். குறிப்பாக கடைசி வரை ஒருவர் பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலையில் நான் சென்று விளையாடினேன். களத்தில் என்னுடைய நேரத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன். அது மும்பை ஸ்கூலின் கலையாகும்.

வான்கடே மைதானத்தில் நான் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன். பந்து சீம் செய்வதை நிறுத்தியதும் நான் என்னுடைய அனைத்து ஷாட்டுகளையும் அடித்தேன். அதை நான் பயிற்சியில் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.