காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்கள் – வெளிமாநில தொழிலாளியான சிறுவன் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கிய மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. காஷ்மீரில் உள்ள வெளிமாநிலத்தவர்களை குறிவைத்தும் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், காஷ்மீரின் பட்கம் மாவட்டம் மஹ்ரய்புரா பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த செங்கள் சூளைக்குள் நேற்று இரவு 9 மணியளவில் துப்பாக்கியுடன் சென்ற பயங்கரவாதிகள் அங்கு வேலைசெய்துகொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பீகாரை சேர்ந்த தில்குஷ் குமார் என்ற 17 வயது சிறுவன் உயிரிழந்தான். பஞ்சாப்பை சேர்ந்த ராஜன் என்ற மற்றொரு தொழிலாளி படுகாயமடைந்தார். இந்து மதத்தினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்த தொழிலாளியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

முன்னதாக நேற்று காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளராக பணியாற்றி வந்த ராஜஸ்தானை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த விஜய் குமார் பயங்கரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட சில மணி நேரங்களில் மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த 31-ம் தேதி குல்காம் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் அங்கு ஆசிரியையாக பணியாற்றி வந்த இந்து மதத்தை சேர்ந்த ராஜ்னி பாலா(36) என்ற பெண்ணை சுட்டுக்கொன்றனர்.

அதேபோல், கடந்த 26-ம் தேதி பட்காம் மாவட்டத்தில் டிவி நடிகையான இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அம்ரீன் பட் என்ற பெண் தனது வீட்டிலேயே பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும், 25-ம் தேதி பாரமுல்லாவில் உள்ள மதுபானக்கடையில் பணியாற்றி வந்த இந்து மதத்தை சேர்ந்த ரஞ்சித் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்தார். அதே, பட்காம் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வந்த இந்து மதத்தை சேர்ந்த ராகுல்பட் கடந்த 13-ம் தேதி அலுவலகத்திற்குள் உள்ளேயே பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினரை குறிவைத்தும், வெளிமாநிலத்தவர்களை குறிவைத்தும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.