கேரள மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

திரிக்காகரா

கேரள மாநிலம் திரிக்காகரா சட்டப்பேரவை இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் உமா தாமஸ் வெற்றி  பெற்றுள்ளார்.

கேரள மாநிலம் திரிக்காகரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாமஸ் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்தார். அவர் மரணம் அடைந்ததால் அந்த  தொகுதிக்குக் கடந்த 31 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த தாமஸின் மனைவி உமா போட்டியிட்டார்.  அவரை எதிர்த்து இடது ஜனநாயக முன்னணி சார்பில் டாக்ட்ர் ஜோ ஜோசப் போட்டியிட்டார்.  இந்த தேர்தலில் கேரளாவை ஆளும் இடது ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார் எனப் பலரும் எதிர்பார்த்தனர்.

இன்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி காங்கிரஸ் வேட்பாளர் உமா தாமஸ் 72 ,770 வாக்குகளும் இடது ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஜோ ஜோசப் 47,752 வாக்குகளும் பெற்றனர்.   காங்கிரஸ் வேட்பாளர் 25,500க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் வெற்றியை எதிர்பார்த்த முதல்வர் பினராயி விஜயனுக்குத் தேர்தல்  முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த இடைத்தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று முதல்வர் பினராயி ராஜினாமா செய்ய வேண்டும் என மாநில காங்கிரஸ், தலைவர் சுதாகரன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.