சீனர்கள் விசா முறைகேடு கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: எந்த நேரத்திலும் கைது?

புதுடெல்லி: சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கப்பட்ட விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2010-2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஒன்றிய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, பஞ்சாப் மாநிலம் மான்சா பகுதியில் நடந்த மின் உற்பத்தி தொழிற்சாலை பணிகளுக்காக 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதற்காக ரூ.50 லட்சம் லஞ்சத்தை சிதம்பரத்தின்  மகன் கார்த்தி சிதம்பரம் பெற்றதாக சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.இதையடுத்து, சென்னை உட்பட கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ம் தேதி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தனர். இந்நிலையில், சொந்த வேலை காரணமாக லண்டன் சென்றிருந்த கார்த்தி சிதம்பரம், இந்தியா திரும்பியவுடன் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் டெல்லியில் மூன்று நாட்கள் விசாரணை நடத்தினர். அதேபோல், இந்த விசா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையும் கடந்த மாதம் 25ம் தேதி கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்தது. இதனால், எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படக் கூடும் என்பதால், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு அவர் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதாக இருந்தால், மூன்று நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் வழங்கும்படி சிபிஐ.க்கு உத்தரவிட்டது. அதேபோல், அவரை கைது செய்வதற்கு ஜூன் 3ம் தேதி வரையில் அமலாக்கத் துறைக்கு தடை விதித்தது. மேலும், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது நேற்று உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்து இருந்தது.அதன்படி, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ஏற்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. எனவே, அவருடைய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என அறிவித்தார். உடனே, கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘கார்த்தி சிதம்பரம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. மேலும், இந்த வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதனால், அமலாக்கத் துறையோ அல்லது சிபிஐ,யோ அவரை 7 நாட்கள் கைது செய்யாமல் இருக்க உத்தரவிட வேண்டும்,’ என கோரினார். அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, கபில் சிபலின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். இதனால், இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.