கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு 

சென்னை: கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த ஏ.குச்சிப்பாளையத்தில் உள்ள கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் இன்று 12.45 மணியளவில் குளிக்கச் சென்ற சங்கவி (18) , பிரியா (19) , மோனிஷா (16) , நவநீதம் (20) , சுமிதா (18), காவியா (எ) திவ்யதர்ஷிணி (10) மற்றும் பிரியதர்ஷிணி (15) ஆகிய 7 பேர் குளிக்கும் இடத்தில் அதிக அளவில் பள்ளம் இருந்ததால், அந்தப் பள்ளப் பகுதியில் உள்ள ஆற்று மணலில் சிக்கி எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தோரில் ஐந்து பேர் குச்சிப்பாளையம் கிராமத்தையும், இருவர் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று, மிகவும் வேதனை அடைந்தேன்.

உயிரழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்த ஏழுபேரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.