"நடிகர் விஜய் படங்களை பார்க்காதீர்கள்" காரணம் கூறும் மதுரை ஆதீனம்

“அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக திருக்கோயில்கள் உள்ளது. இந்து அறநிலையத்துறையை கலைக்க வேண்டும். ஆன்மீகத்தை திருடிக்கொண்டு திராவிடம் என சொல்கிறார்கள்” என மதுரை ஆதீனம் பேசியுள்ளார். மேலும் “இந்துக்களை அவமதிக்கும் வகையிலான திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள்” என்றும் அவர் பேசியுள்ளார்.
மதுரை பழங்காநத்தத்தில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், “பாரதியார் தற்பொழுது இருந்திருந்தால் `செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே’ என்று பாடியிருப்பார். அந்தளவுக்கு மதுக்கடைகள் ஆதிக்கம் இங்கே அதிகரித்துள்ளது. 
image
கோயில்களுக்குள் அரசியல் புகுந்துவிட்டது. ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என நினைக்கிறார்கள். நாங்கள் ஏன் அரசியல் பேச கூடாது? ஆதீனங்கள் அரசியல் பேச கூடாது என்கிறார்கள், அரசியலை நாங்கள் பேசாமல் யார் பேசுவது? திருக்கோயில் சொத்துக்கள் இங்கே தொலைந்து போகிறது. உண்மையில் தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரமே திருக்கோயிலுக்குள்தான் உள்ளது. முதலில் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை? அரசியல்வாதிகள் கோயிலில் தர்க்காராக வந்து இருந்து கொள்கிறார்கள். கோயில் நகைகளை உறுக்குவதாககூட கூறுகிறார்கள். ஆனால் எங்கு உருக்குகிறார்கள் என தெரியவே இல்லை.
தற்பொழுது சாமி வருவது போல் உண்டியல் வருகிறது. இதில் மக்கள், இந்து அறநிலையத்துறை கோவில் உண்டியலில் காசு போடாதீர்கள். ஏனெனில் அந்தந்த கோவிலுக்கு செல்வதில்லை. உண்டியல் பணம் வேறு எங்கோ செல்கிறது. திருவாசகத்தைக் கூட அரசியல்வாதிகள் திருடிவிட்டார்கள். `என்னுயிர் தலைவா’ என்பதை தல என மாற்றி விட்டார்கள். திராவிட பூமி என்று சொல்லிக்கொண்டு இறந்தவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். கோயில் நம்மைவிட்டு போனால் நமது சமயமும் நம்மை விட்டு போய்விடும்.
image

கோயில் இடங்களை ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் எடுத்து கொண்டுள்ளனர். குத்தகை கேட்டால் குத்துவதற்கு கை வருகிறது. ஆன்மீகத்தை திருடி கொண்டு திராவிடம் என சொல்கிறார்கள். இலவசமாக கோவணமும் திருவோடும் கொடுக்கும் திட்டத்தை மட்டும் பாக்கி வைத்துள்ளது திராவிட கட்சிகள். `திராவிடர் என்பதற்கு அர்த்தம் என்ன’ என சீமான் கேட்ட கேள்விக்கு தற்பொழுது வரை யாரும் பதில் சொல்லவில்லை. `திராவிட பாரம்பரியம்’ என்று சொல்லும் அரசியல்வாதிகள் விபூதி பூச மறுக்கிறார்கள். ஆனால் ரம்ஜான் என்றால் குல்லா போட்டுக்கொள்கிறார்கள்.
இதையும் படிங்க… புதுச்சேரி: 80 வயது மூதாட்டி படுகொலை… வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியது காவல்துறை
அறநிலையத்துறை பொல்லாத துறையாக உள்ளது. அறநிலையதுறை அதிகாரிகள் விபூதி பூசுவதில்லை, கோயிலில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு தெரிவதில்லை. அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக திருக்கோயில்கள் உள்ளது. அறநிலையத்துறை கலைத்துவிட வேண்டும், கோயில்கள் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இயங்க வேண்டும்.
image
`சாமியார்கள் யாசகம் பெற்று சாப்பிட வேண்டும்’ என கூறிய சு.வெங்கடேசன் என்னுடன் ஒரு வாரம் தங்கி இருந்தால் சுருண்டு போய் விடுவார். விபூதி பூசுபவர்களாக பிறந்தால் புண்ணியம் கிடைக்கும். இந்துக்களை அவமதிக்கும் வகையிலான திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள். கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்தால், என்னை சங்கி என சொல்கிறார்கள். சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும் போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்க கூடாது?” என பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.