பெய்ஜிங்கில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு : இயல்பு நிலை திரும்புகிறது..!!

பெய்ஜிங்,

சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. உருமாறிய கொரோனா காரணமாக இந்த தொற்று பரவல் அதிகரித்ததாக கூறப்பட்டது. அந்நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்ததால் அங்கு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

சீனாவில் கடந்த சில வாரங்களாக தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஷாங்காயில் கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பெய்ஜிங்கில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக குறைக்கப்பட்டு இயல்பு நிலை திரும்புகிறது. தலைநகர் பெய்ஜிங்கில், ஃபெங்டாய் மற்றும் சாங்பிங்கின் போன்ற சில பகுதிகளைத் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் உணவகங்கள் மீண்டும் திறக்கப்படுகிறது. திரையரங்குகள் போன்ற பொழுதுபோக்கு இடங்களில் 75 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் பொது இடங்களுக்குள் நுழையவும் பொதுமக்கள் ஒவ்வொரு 72 மணி நேரத்திற்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்று முடிவுகள் பெற்றிருக்க வேண்டும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.