‘என்ன அன்புய்யா..' – மறைந்த புனீத் ராஜ்குமாருக்கு ரசிகர்கள் செய்த பிரமிக்க வைக்கும் செயல்

மறைந்த கன்னட திரையுலக நடிகரான புனீத் ராஜ்குமாருக்கு அவரது ரசிகர்கள், அதிக பொருட்செலவிலான வெண்கல சிலையை நிறுவி ஆச்சரியம் அளித்துள்ளனர்.

கன்னட திரையுலகின் ஜாம்பவான் ராஜ்குமாரின் மகனும், முன்னணி நடிகராக வலம் வந்தவருமான புனீத் ராஜ்குமார், கடந்த வருடம் அக்டோபர் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். வழக்கம்போல் காலை ஜிம்மில் உடற்பயிற்சிக்கு சென்ற அவருக்கு, அங்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட புனீத் ராஜ்குமார், அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரின் மறைவு இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் உடல் நலனில் அதிக அக்கறையுள்ள புனீத் ராஜ்குமார் 46 வயதில் உயிரிழந்தது பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்பு என்றும், பவர் ஸ்டார் என்றும் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட புனீத் ராஜ்குமார் திடீர் மறைவு ரசிகர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. திரையுலகம் மட்டுமின்றி, தங்களது ட்ரெஸ்ட் மூலம் பல்வேறு நல உதவிகளையும் புனீத் ராஜ்குமார் மேற்கொண்டுவந்ததும் ஒரு காரணம்.

image

மேலும் புனீத் ராஜ்குமார் இறந்ததும் அவர் கண்கள் தானம் செய்யப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் ஒரே நாளில் 4 பேருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் கண்கள் பொருத்தப்பட்டது. உயிருடன் இருந்தபோது அவரின் பண்பான குணத்தினால் ஈர்க்கப்பட்ட அவரது ரசிகர்கள், புனீத் ராஜ்குமாரின் உருவ சிலையை அவ்வப்போது ஆங்காங்கே நிறுவி வருகின்றனர்.

இந்நிலையில், 7.4 அடியில், புனீத் ராஜ்குமாரின் வெண்கல உருவ சிலையை ஹோசபெடே நகரத்தில் அவரது ரசிகர்கள் கடந்த 5-ம் தேதி நிறுவியுள்ளனர். புனீத் ராஜ்குமார் மீது அவர் ரசிகர்கள் அன்பை பொழியும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் புனீத் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி, அவரது தம்பி ராகவேந்திரா ராஜ்குமார் மற்றும் ராவேந்திராவின் மனைவி மங்களா ஆகியோர் கலந்துகொண்டனர்.

image

புனீத் ராஜ்குமாரின் ரசிகர்கள் வைத்த சிலையிலேயே, இந்த வெண்கல சிலைதான் அதிக மதிப்புள்ள சிலையாகும். சிலைகள் தயாரிப்பில் பெயர் போன ஊரான ஆந்திர மாநிலம் குண்டூர் தெனாலி என்ற இடத்தில் இந்த வெண்கல சிலை, 6.4 லட்சம் ரூபாய் செலவில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.

புனீத் ராஜ்குமார் எப்போதும் கோட் ஷுட்டில் மிகவும் அழகாக காட்சியளிப்பார் என்பதால், அவ்வாறே வெண்கல சிலையை உருவாக்க கூறியதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மிகவும் அழகாக உள்ள புனீத் ராஜ்குமாரின் வெண்கல சிலை அருகே நின்று, ஏராளமானோர் நாள்தோறும் செல்ஃபி எடுத்து செல்கின்றனர். ரசிகர்களின் இந்த அன்பால் மறைந்த ராஜ்குமார் குடும்பம் மட்டுமின்றி பிரபலங்களும் பிரமித்து போயுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.