ஏஆர்.ரஹ்மானைப் புகழ்ந்த யுவன் ஷங்கர் ராஜா

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். ஆஸ்கர் விருது வென்ற ரஹ்மான் உலகம் முழுவதும் பல்வேறு இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். அவரைப் பற்றி தெரியாத ஒரு விஷயத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. அந்த பேட்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் துபாயில் நடந்த 'துபாய் எக்ஸ்போ 2020' நிகழ்வில் இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா, அனிருத் ஆகியோரது கச்சேரிகள் நடைபெற்றது. அது பற்றிய ஒரு விவரத்தை அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் யுவன்.

“துபாய் எக்ஸ்போவில் இசை நிகழ்ச்சிகள் நடக்கக் காரணம் ஏஆர் ரஹ்மான் தான். எக்ஸ்போ நிகழ்வின் அமைப்பாளர்கள் ரஹ்மானிடம் இசை நிகழ்ச்சி நடத்தக் கேட்டுள்ளனர். அவர்களிடம் ஏஆர் ரஹ்மான் நான் இசை நிகழ்ச்சியை நடத்தினால், எனது ஊரில் உள்ளவர்களும் வந்து நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நீங்கள் கோல்டுபிளே, ஷகிரா ஆகியோரை அழைத்து வருவீர்கள். அவர்களைப் போலவே எனது ஊரிலும் புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் உள்ளார்கள் என அப்பாவின் பெயரையும், எனது பெயர், அனிருத் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். அவர்தான் நாங்கள் அங்கு இசை நிகழ்ச்சி நடத்தக் காரணம்,” என்று யுவன் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

“இது போன்று யாரும் செய்ய மாட்டார்கள், ஆனால், ரஹ்மான் செய்தார். அங்கு அவரை சந்திக்கவும், பேசவும் வாய்ப்பு கிடைத்தது” என ரஹ்மானைப் பாராட்டியுள்ளார்.

துபாய் எக்ஸ்போ 2020 நிகழ்வில் அனிருத் பிப்ரவரி மாதத்திலும், இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா மார்ச் மாதத்திலும் இசை நிகழ்ச்சியை நடத்தினார்கள். அப்போது ஏஆர் ரஹ்மானை அவரது ஸ்டுடியோவிற்கே சென்று இளையராஜா சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிட வேண்டிய ஒன்று.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.