கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி திடீர் மாற்றம்

புதுடெல்லி: கடந்த 2010- 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது ஒன்றிய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் மின் உற்பத்தி தொழிற்சாலை பணிகளுக்காக 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் தொகையை முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்ட மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி பூனம்-ஏ-பாண்டே விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 8ம் தேதி ஒத்திவைத்தார். இந்நிலையில், வழக்கை விசாரித்து முடித்த  நீதிபதி பூனம்-ஏ-பாண்டேவை  இந்த அமர்வில் இருந்து நீக்கம் செய்து வேறு ஒரு கோடைக்கால சிறப்பு அமர்வுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், வரும் வாரம் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் வழக்கு புதிய நீதிபதி அமர்வில் பட்டியலிட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.