கிரண்பேடி ஆளுநராக இருந்தபோது ராஜ்நிவாஸ் பாதுகாப்புக்கு ரூ.1.28 கோடி அரசின் நிதி வீணடிப்பு: ஆர்டிஐ தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பணியாற்றியபோது, ராஜ்நிவாஸ் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்பு படையை வரவழைத்த காரணத்தால் ரூ.1.28 கோடி அரசின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக ஆர்டிஐ தகவலில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆட்சியில் அமைச்சரவையினர் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பால் ராஜ்நிவாஸ் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்புபடையை வரவழைத்தனர். இதற்காக ரூ. 1.28 கோடி அரசின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை செயலரிடம் புகார் தரப்பட்டுள்ளது. புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் ஏற்பட்ட அதிகார போட்டியின் உச்சமாக ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸை முற்றுகையிட உள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். இதையடுத்து அப்போதைய ஆளுநர் கிரண்பேடி பாதுகாப்பை தீவிரப்படுத்தினார். இதனால் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணம் கடந்த 4.1.2021 முதல் 18.2.2021 வரையிலான 44 நாட்களுக்கு ஆளுநர் மாளிகையை சுற்றி மட்டுமின்றி அதனை ஒட்டியுள்ள பிற சாலைகளிலும் தடுப்புகள் அமைத்ததோடு, ஆர்ஏஎப், சிஐஎஸ்எப் ஆகிய பிரிவுகளின் காவலர்களால் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு பணிக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டிருந்தது.

இதுபற்றி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல்களை பெற்ற ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி கூறியதாவது: ”பாதுகாப்பு பெயரில் 44 நாட்கள் ஆன செலவு பற்றி ஆர்டிஐ மூலம் புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் 11.2.2021 அன்று தகவல்களாக கேட்டதற்கு அவர்கள் தகவல்கள் தரவில்லை. மேல்முறையீடு செய்து புகார் தந்ததற்கு பிறகே தந்தனர். அதன்படி, மத்திய சிஐஎஸ்எப் ஒரு கம்பெனி காவலர்களுக்கு ரூ.28.42 லட்சமும், இவர்களின் போக்குவரத்திற்கு பிஆர்டிசி பேருந்துக்கு வாடகை ரூ.39.95 லட்சமும், கடற்கரை சாலையில் தடுப்புகள் அமைத்ததற்கு ரூ.2.87 லட்சமும் என்ற தகவல் அளித்திருந்தாலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஆர்ஏஎப் 2 கம்பெனி காவலர்களுக்கு செலவு செய்த ரசீது இதுவரை அனுப்பவில்லை என தகவலில் கூறினர். இந்த இரண்டு கம்பெனிக்கும் சுமார் ரூ.56.84 லட்சம் செலுத்த வேண்டியிருக்கிறது.

இதன் மூலம் பாதுகாப்பு பணிக்கு மட்டுமே ரூ.1.28 கோடி செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. புதுச்சேரியிலேயே இதுபோன்ற பணிக்கு உருவாக்கப்பட்ட ஐஆர்பிஎன் மற்றும் ஆயுதப்படை காவலர்களை பயன்படுத்தாமல், மத்திய பாதுகாப்பு படையினரை அழைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. மத்திய பாதுகாப்பு படையினரை அழைத்து அரசின் நிதி ரூ.1.28 கோடியை வீணடித்துள்ளனர்.

எனவே இந்த போராட்டத்தால் அசாதாரண சூழ்நிலை ஏதும் ஏற்பட வாய்ப்பே இல்லாத போது மத்திய பாதுகாப்பு படையினரை அழைக்க உத்தரவிட்டது யார் என விசாரணை செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய உள்துறை செயலருக்கு புகார் தந்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.