கிருஷ்ணகிரியில் விவசாயிகளுக்கு கைகொடுத்த கம்பு மகசூல்: விலை உயர்வால் இரட்டிப்பு மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கம்பு மகசூல் அதிகரித்து, விலையும் உயர்ந்துள்ளதால், விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனப்பள்ளி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சூளகிரி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மானாவாரி நிலங்களில், கம்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கம்புக்கு விதைப்பு முதல் அறுவடை வரை தண்ணீர் மட்டும் இருந்தால் போதும் என்கிற நிலையில், விவசாயிகள் கம்பை சாகுபடி செய்து வருகின்றனர்.

நிகழாண்டில் பரவலாக பெய்து வரும் மழையால், மானாவாரி நிலங்களில் விவசாயிகள் கம்பை விதைத்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விதைத்த கம்பு, தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டை விட கம்பு விளைச்சல் அதிகரித்து, விலை உயர்ந்துள்ளதால், வியாபாரிகள் நேரடியாக நிலத்திற்கு வந்து கொள்முதல் செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செட்டிப்பள்ளி பகுதி விவசாயிகள் கூறும்போது, மாவட்டத்தில் நிகழாண்டில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் கம்பு சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கம்பை பொறுத்தவரை நீர்பாசன முறையில், ஒரு ஏக்கருக்கு 800 கிலோவில் இருந்து ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

மானாவாரியில் 600 கிலோவில் இருந்து 800 கிலோ வரை மகசூல் கிடைக்கும். மேலும், ஊட்டச்சத்து மாவில் கம்பு முக்கிய உணவாக சேர்க்கப்படுகிறது. இதனால் கம்பு தேவை அதிகரித்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் கம்பை வாங்க வியாபாரிகள், போச்சம்பள்ளி, குந்தாரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி பழையபேட்டை சந்தைக்கு வருகின்றனர். தற்போது வியாபாரிகள் தோட்டத்திற்கு நேரடியாக வந்தும் கொள்முதல் செய்கின்றனர்.

கம்பு தரத்தைப் பொறுத்து, கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரையிலும் கொள்முதல் செய்கின்றனர். 100 கிலோ மூட்டை ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. கடந்த ஆண்டு கம்பு கிலோ ரூ.20 வரை விற்கப்பட்டது. தற்போது மகசூலும், விலையும் அதிகரித்து உள்ளது என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.