பொதுமக்கள் குப்பைக் கழிவுகளை தரம்பிரித்து வழங்க வேண்டும்! சென்னை மாநகராட்சி

சென்னை: பொதுமக்கள் குப்பைக் கழிவுகளை தரம்பிரித்து வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கி வருகிறது.

ஏற்கனவே சென்னை மாநகராட்சி  இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங் களில் 200 வார்டுகள் உள்ளன. இந்த 200 வார்டுகளிலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரம் டன் குப்பைகள் வீடுகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் மூலம் உரம் மற்றும் மீத்தேன் எரிசக்தி தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது. குப்பைகளை தரம் பிரித்து வழங்காத இல்லங்களுக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, நோட்டீஸ் வழங்கப்பட்டும் குப்பைகளை தரம் பிரித்து தராத இல்லங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், தற்போது, தனிநபர் இல்லங்களில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கப்பட வேண்டும் என்றும் வீடுவீடாக துண்டு பிரசுரம் விநியோகித்து வருகிறது. அதில், சென்னை மாநகரை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை (Wet Waste/Biodegradable Waste and Dry Waste Non-Biodegradable Waste) என வகைப் பிரித்து அவற்றை தினசரி வீடு தோறும் வரும் மாநகராட்சி தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. தீங்கு விளைவிக்ககூடிய வீட்டின் அபாயகரமான குப்பையை (Domestic Hazardous Waste) வாரம் ஒருமுறை தனியாக வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு பொது மக்களால் பிரித்து கொடுக்கப்படும் மக்கும் குப்பையை பதப்படுத்தி, அதிலிருந்து இயற்கை உரம் (Organic Manure) மற்றும் இயற்கை எரிவாயு (Bio-CNG) தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யவும், பதப்படுத்தவும் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் சென்னையின் மிகப் பெரிய குப்பை கிடங்குகளான கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லும் குப்பையின் அளவு குறைக்கப்பட்டு, சுற்றுப்புறத் தூய்மை மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கும் குப்பைகள்: உணவு கழிவுகள், காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், மாமிச கழிவுகள், தோட்ட கழிவுகள் மற்றும் காய்ந்த மலர்கள், இலைகள் ஆகும்.

மக்காத குப்பைகள்: பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், அட்டைகள், காகிதம், செய்தித்தாள்கள், தெர்மோகோல், தோல் பொருட்கள், இரும்பு கழிவுகள், மரக்கழிவுகள், டயர், டியூப் மற்றும் ரப்பர் பொருட்கள் ஆகும்.

தீங்கு விளைவிக்ககூடிய வீட்டு உபயோக குப்பைகள் (Domestic Hazardous Waste): தேவையற்ற வர்ண டப்பாக்கள், காலி பூச்சிக் கொல்லி மருந்து டப்பாக்கள், சி.எப்.எல்.விளக்குகள், குழல் விளக்குகள் மற்றும் இதர விளக்குகள், காலாவதியான மருந்துகள், உடைந்த பாதரச ஜீரமானிகள், பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மற்றும் ஊசி மருந்து குழல்கள் மற்றும் சுகாதார கெடுதல் கழிவுகளான பயன் படுத்தப்பட்ட முகக்கவசங்கள்,

மேலும், அணையாடைகள் (டயப்பர்) சுகாதார அணையாடைகள் (சானிட்டரி பேட்) ஆகிய கழிவுகளை பாதுகாப்பாக தனியே ஒரு உறையில் போட்டு கட்டி அவைகளை மக்காத குப்பையோடு சேகரித்து விடுகள் தோறும் வரும் பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மை பணியாரிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே, மேற்கூறியவாறு மக்கும், மக்காத குப்பையாக விதிகளின் படி வகைப் பிரித்து வழங்காத பொது மக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள், 2019ன் படி அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அதன்படி, தனி நபர் இல்லங்களுக்கு ரூ.100, அடுக்குமாடி குடியிருப்பு / குழு குடியிருப்புகளுக்கு ரூ.1000, பெருமளவு குப்பை உருவாக்குபவர்களுக்கு ரூ.5,000 என அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த துண்டு பிரசுரங்களை சென்னை மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வழங்கி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.