பர்ஸ்ட் நைட்டில் குடிக்க சரக்கு கேட்டா சார்.. ரெண்டே நாளில் எஸ்கேப்பாயிட்டா..! அய்யோ பாவம் 90 கிட் மாப்பிள்ளை ..!

32 வயதான சென்னை இளைஞர் ஒருவர், திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் புரோக்கர் பேச்சை கேட்டு ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து விருதுநகரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணம் முடிந்து ரெண்டே நாட்களில் அந்தப்பெண் வீட்டில் இருந்து 10 சவரன் நகையை திருடிக் கொண்டு தப்பிச்சென்று விட்டதால் ஏமாற்றத்துடன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருமணமான ரெண்டே நாளில் சரக்கு கேட்டு அடம்பிடித்த புதுப்பெண்ணால் கைவிடப்பட்ட 32 வயதான அக்மார்க் 90 கிட் மாப்பிள்ளை தமிழ்வாணன் இவர் தான்

சென்னை பள்ளிகாரணை பகுதியை சேர்ந்தவரான தமிழ்வாணன் தன்னுடைய திருமணத்திற்காக பல வருடங்களாக பல இடங்களில் பெண் பார்த்துள்ளார்.

மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இல்லை, மாப்பிள்ளைக்கு வயது அதிகம், மாப்பிள்ளை குண்டாக இருக்கிறார் என்று ஆளுக்கொரு காரணம் சொல்லி பெண் வீட்டார் நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்வாணனுக்கு உறவினரான சேலத்தை சேர்ந்த திருமண புரோக்கர் மகேஷ் என்பவர் தனக்கு தெரிந்த ஒரு பெண் இருப்பதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி அன்று விருதுநகர் முருகர் கோயிலுக்கு தமிழ்வாணனை குடும்பத்தோடு அழைத்து சென்றுள்ளார்.

புரோக்கர் மகேஷ், கமலா என்ற புரோக்கரை அறிமுகப்படுத்த, அவர் மேட்டூரை சேர்ந்த சிவா என்ற புரோக்கரை அறிமுகப்படுத்த பின்னர் காலை 11 மணியளவில் பூஜா என்ற 36 வயது பெண்ணை தமிழ்வாணன் குடும்பத்திற்கு அறிமுகம் செய்துள்ளனர்.

மாப்பிள்ளை பெண் பிடிச்சிருக்கு என்றதும், பெண்ணை திருமணம் செய்து தரவேண்டும் என்றால் 2 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என பேரம் பேசியுள்ளனர். பின்னர் ஒருவழியாக ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு பேரம் முடிந்துள்ளது.

தமிழ்வாணன் குடும்பத்தினர் கையில் வைத்திருந்த 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை பணத்தை அங்கு கொடுத்துள்ளனர். மீதமுள்ள 15 ஆயிரம் பணத்தை சென்னை சென்றதும் தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

90 கிட் மாப்பிள்ளையின் ஆர்வக்கோளாறை பயன்படுத்தி மணமகளுக்கு பட்டுச்சேலை வாங்கிக் கொடுத்து அன்று மாலையே அதே கோயிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்த கையோடு சென்னை வந்ததாகவும், சென்னை வந்த ரெண்டே நாளில் தான் வாங்கிக் கொடுத்த சேலைகள் மற்றும் பீரோவில் இருந்த 10 சவரன் நகை மற்றும் ரொக்கப்பணத்துடன் பூஜா தப்பி ஓடிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் தமிழ் வாணன்.

புகாரில் முதலிரவிலேயே பூஜா தன்னிடம் குடிப்பதற்கு மது கேட்டு அடம் பிடித்ததாகவும், திருமணத்துக்கு பின்னர் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று தான் கூறியதால் தாம்பத்தியத்திற்கே தடை போட்டு விட்டதாக ஏமாற்றத்துடன் தெரிவித்தார் தமிழ் வாணன்

அவரை சமாதானப்படுத்த மறு நாள் 10 ஆயிரம் ரூபாய்க்கு சேலை வாங்கி கொடுத்த நிலையில், அதற்கு மறு நாள் பிரபல பல்பொருள் அங்காடிக்கு மளிகை சாமான் வாங்க சென்ற போது கூட்டத்தை பயன்படுத்தி பூஜா தன்னை ஏமாற்றி சென்று விட்டதாக தெரிவித்தார் தமிழ் வாணன்

தன்னை ஏமாற்ற வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு பணம் பறித்த புரோக்கர்களுடன் சேர்ந்து பூஜா, தான் வாங்கிக் கொடுத்த ஜவுளிகள் மற்றும் வீட்டில் இருந்த 10 சவரன் நகைகளை திருடி அவரது கூட்டாளியிடம் கொடுத்து விட்டு, தன்னை கடையில் தனியாக தவிக்க விட்டு விருது நகருக்கு தப்பிச்சென்றுவிட்டார் என்று விரக்தியுடன் தெரிவித்தார்.

பையனுக்கு வயதாகி கொண்டே போகிறது என்று புரோக்கர்கள் பேச்சை நம்பி பெண்ணின் குடும்ப விவரத்தை முழுமையாக ஆராயாமல் பெண்ணுடன் திருமண பந்தத்தில் இணைத்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.