Maharashtra Govt Crisis:'சரத் பவாரை மத்திய அமைச்சர் மிரட்டுகிறார்' – சஞ்சய் ராவத் பகீர்!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, மத்திய அமைச்சர் ஒருவர் மிரட்டுவதாக, சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டி உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். அவருடன் சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட சுமார் 40 எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மும்பையில் உள்ள முதலமைச்சரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வெளியேறினார். இதனால் அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா என்ற கேள்வி எழுந்தது. எனினும் அவர் ராஜினாமா செய்ய மாட்டார் என, சிவசேனா மூத்தத் தலைவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று, அக்கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். இதற்கிடையே, ஏக்நாத் ஷிண்டே உட்பட 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகருக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் இன்று, மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை மத்திய அமைச்சர் ஒருவர் மிரட்டுகிறார். மகா விகாஸ் அகாதி அரசை காப்பாற்றினால், அவர் வீட்டுக்கு செல்ல முடியாது என, மிரட்டல் விடுக்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் செல்லப்பிள்ளை சரத் பவார். அவருக்கு மிரட்டல் விடுப்பதை ஏற்க முடியாது. இது, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தெரியுமா..? இது போன்ற மிரட்டல்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.