ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் ‘முன்னோடி மாநிலமாக‘ தமிழ்நாடு திகழ்கிறது…அமைச்சர் சக்கரபாணி உரை

டெல்லி: உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு தொடர்பாக இன்று டெல்லி நடைபெற்ற மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக உணவு  மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உரை ஆற்றினார். அதனை காண்போம், ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் திட்டத் துறை மற்றும் கைத்தறித் துறை அமைச்சருக்கும், ஒன்றிய இணை அமைச்சர்கள் மற்றும் அனைத்து  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர் பெருமக்களுக்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அலுவலர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி  செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரங்கில் பதிவு செய்வதற்கு வாய்ப்பு அளித்தமைக்காக அனைவருக்கும் எங்கள் அன்புத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு ,அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூகப் பாகுபாடின்றி உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்திட கடந்த 40 ஆண்டுகளாக அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. 01.11.2016 முதல் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 அமல்படுத்தப்பட்ட நிலையிலும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற நிலையினைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் ‘முன்னோடி மாநிலமாக‘ தமிழ்நாடு திகழ்கிறது. எங்களது போற்றுதலுக்குரிய தலைவர், அன்றைய முதல்வர், முத்தமிழறிஞர் கலைஞர், தமிழக மக்களுக்குச் சத்தான உணவுப் பொருட்கள் வழங்கும் பொருட்டு ‘சிறப்பு பொது விநியோகத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ உளுத்தம் பருப்பு, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ ஆட்டா மாவு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை மானியம் அதிகம் கொடுத்து குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது. மேலும், அன்றைய முதல்வர், முத்தமிழறிஞர், கலைஞரால் பள்ளிகளுக்குச் செல்லும் அனைத்துக் குழந்தைகளுக்கும் மதிய உணவு திட்டத்தின் கீழ் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை முட்டை வழங்கும் திட்டம் 1989-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 2010-ஆம் ஆண்டில் வாரத்திற்கு ஐந்து நாட்களுக்கு முட்டை வழங்கும் வகையில் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டது.  இதுமட்டுமில்லாமல், எங்களது அன்புத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2.09 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 14 வகையான மளிகைப் பொருள்களும் ரூ.4000/- ரொக்கத் தொகையும் 2021 ஜுன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கியதோடு  2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகையான ஊட்டச்சத்துள்ள  உணவுப் பொருள்களையும் வழங்கியது.தமிழ்நாட்டிலுள்ள பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் நடைபெறும் பரிவர்த்தனைகளில் 98 % கைவிரல் ரேகை பதிவு மூலம் நடைபெறுகிறது. இதனால் உரிய குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவது உறுதி செய்யப்படுகிறது. எங்கள் அன்புத்தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தைச் சமீபத்தில் அறிமுகப் படுத்தியுள்ளார் என்பதை இந்த நேரத்தில் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட பல்முனை வறுமைக்குறியீடு அறிக்கையில் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 4.98 % மட்டுமே ஏழ்மையில் உள்ளனர் என்றும் ஆனால் இந்தியா முழுமைக்கும் 25.01 % பேர்கள் ஏழைகளாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருப்பது இச்சாதனைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.தொலைநோக்குப் பார்வையுடன் எங்களது பேரன்பிற்குரிய தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் ஒன்றிய அரசுடனும், இதர மாநில அரசுகளுடனும் ஒன்றிணைந்து நம் நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட உறுதுணை புரிவோம் என்று நான் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.