குருஜிக்கு வாஸ்து சரியில்லை.. குனிந்தவரை குத்திய கொடூரம்.. ஆசீர்வாதம் பெற்று சம்பவம்..! தகவல் அறிந்து முதல் அமைச்சர் ஆவேசம்.!

ஓட்டல் அறையில் அமர்ந்து வாஸ்து சொல்லி வந்த பிரபல வாஸ்து குருஜியிடம் ஆசீர்வாதம் வாங்குவது போல சென்ற மர்ம நபர்கள் அவரை குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாஸ்துநிபுணர் கொலையான சம்பவத்தின் பகீர் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

கர்நாடகாவின் பிரபல வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜி பாகல்கோட்டை மாவட்டம் போடகிகல்லு பகுதியைச் சேர்ந்த 59 வயதான சந்திரசேகர் குருஜி வீடு கட்டவும், பல்வேறு சுபகாரியங்களை நடத்தும் இடங்கள் குறித்தும் இவரிடம் ஏராளமானோர் வாஸ்து பார்த்து வந்தனர். பல்வேறு டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பொதுமக்களுக்கு வாஸ்து குறித்த கேள்விகளுக்கு பதில் கூறி வந்தார்.

சந்திரசேகர் குருஜிக்கு 2 மனைவிகள் என்று கூறப்படுகின்றது. முதல் மனைவி இறந்துவிட்டார். 2 வது மனைவியுடன் குடித்தனம் நடத்தி வந்தார்.

கடந்த 2-ந்தேதி உப்பள்ளி உன்கல்லுக்கு சென்ற சந்திரசேகர் குருஜி அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

சம்பவத்தன்று ஓட்டலுக்கு வந்த 2 பேர், சந்திரசேகர் குருஜியிடம் ஆசி வாங்க வேண்டும் என்று கூறியதால், அவர்களை வரவேற்பு அறையில் காத்திருக்கும்படியும் தான் வருவதாகவும் தெரிவித்தார்.

அதன்படி சந்திரசேகர் குருஜி, அறையில் வரவேற்பு அறைக்கு வந்து தன்னை பார்க்க வந்தவர்களை சந்தித்தார். அப்போது அவர்களில் ஒருவர் சந்திரசேகர் குருஜியிடம் ஆசி பெறுவற்காக காலில் விழுந்தார். அந்த சமயத்தில் மற்றொரு நபர், தான் வைத்திருந்த கத்தியால் சந்திரசேகர் குருஜியை சரமாரியாக குத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

ஆனாலும் காலில் ஆசி வாங்குவது போல் விழுந்த நபர், அவரை கீழே தள்ளிவிட்டு அவரும் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் சந்திரசேகர் குருஜி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதையடுத்து மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால், ஓட்டலின் வரவேற்பு அறையில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரசேகர் குருஜியை அங்கிருந்தவர்கள் மீட்டு உப்பள்ளி கிம்ஸ் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்தது சம்பவம் நடந்த தனியார் ஓட்டலுக்கு தார்வார்-உப்பள்ளி மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் வித்யாநகர் போலீசார் விரைந்து சென்றனர். சந்திரசேகர் குருஜியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனியார் ஓட்டலில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக் காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மர்மநபர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து போலீஸ் கமிஷனர் லாபுராம் உத்தரவிட்டார்.

அதன்பேரில் தனிப்படை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் சந்திரசேகர் குருஜி கொலையில் தொடர்புடைய 2 பேர் பெலகாவி மாவட்டம் ராமதுர்கா பகுதியில் காரில் தப்பிச் சென்றபோது, அவர்களை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், கைதானவர்கள் கலபுரகியை சேர்ந்த மகாந்தேஷ், மஞ்சுநாத் என்பது தெரியவந்தது. இதில் மகாந்தேஷ் கடந்த 2016-ம் ஆண்டு சந்திரசேகர் குருஜியிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவரை தொடர்ந்து வனஜாக் ஷி மற்றும் மஞ்சுநாத் ஆகியோர் குருஜியிடம் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

அப்போது வனஜாக் ஷிக்கும், மகாந்தேசுக்கும் காதல் ஏற்பட்டது. அவர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு சந்திரசேகர் குருஜி திருமணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில் வனஜாக் ஷியும், மகாந்தேசும் சந்திரசேகர் குருஜியின் பினாமியாக இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.

சந்திரசேகர் குருஜி, இந்த இருவரது பெயரில் சொத்துகளை வாங்கி வந்த நிலையில், சந்திரசேகர் குருஜியின் சொத்துகளை அபகரிக்க திட்டமிட்ட வனஜாக் ஷி, மகாந்தேஷ் மற்றும் மஞ்சுநாத் ஆகிய 3 பேரும், வேலையில் இருந்து நின்றுவிட்டனர்.

இதனால், அவர்கள் பெயரில் உள்ள சொத்துகளை சந்திரசேகர் குருஜி திரும்ப கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஆனது. மேலும் சந்திரசேகர் குருஜி, அவர்கள் போலீசார் மூலம் தனது செல்வாக்கை பயன்படுத்தி 3 பேருக்கும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதனால் அவர்கள் 3 பேரும் சேர்ந்து சந்திரசேகர் குருஜியை திட்டமிட்டு கத்தியால் குத்தி தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.

இந்த கொலையில் தொடர்புடைய மகாந்தேசின் மனைவி வனஜாக் ஷியையும் போலீசார் கைது செய்தனர். ((Spl gfx out))கைதான 3 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகின்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.