8 நாட்களில் 18 சம்பவங்கள்: ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு டிஜிசிஏ நோட்டீஸ்

புதுடெல்லி: கடந்த 8 நாட்களில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பல்வேறு விமானங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக தரையிறக்கப்பட்டன. இதனையடுத்து, டிஜிசிஏ எனப்படும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நேற்று மட்டும் இரண்டு சம்பவங்கள்: டெல்லியிலிருந்து மும்பை வழியாக துபாய்க்கு நேற்று மதியம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்தில் இடதுபுற எரிபொருள் டேங்க்கில் எரிபொருள் வழக்கத்துக்கு மாறாக குறைவாக இருப்பதாக இன்டிகேட்டர் காட்டியது.

இதையடுத்து பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கிய பின் விமானத்தை சோதனை செய்தபோது, எரிபொருள் டேங்கில் எந்தவெளிப்புற கசிவும் இல்லை என தெரிந்தது. இதையடுத்து மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்பப்பட்டு அதில் பயணிகள் துபாய் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் க்யூ-400 ரக விமானம் குஜராத்தின் கண்ட்லா நகரிலிருந்து நேற்று மும்பை புறப்பட்டது. விமானம் 23,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அதன் இறக்கையில் உள்ள காற்று தடுப்பான் தகட்டில் விரிசல் விழுந்தது. இதையடுத்து, மும்பை விமான நிலையத்தில் அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று நடந்த இந்த இரண்டு சம்பவங்கள் உள்பட ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 18 விமானங்களில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளது.

டிஜிசிஏ நோட்டீஸில் இருப்பது என்ன? – இந்நிலையில் டிஜிசிஏ தனது நோட்டீஸில், “கடந்த சில நாட்களில் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் பல ஒன்று அவை புறப்பட்ட இடத்திற்கு திரும்பியுள்ளன இல்லாவிட்டால் அவை வேறு ஏதாவது விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அவசரமாகத் தரையிறங்கியுள்ளது. இதற்கு மிக மோசமான கண்காணிப்பே காரணமாக இருக்க வேண்டும். இல்லையேல், பராமரிப்பு நடவடிக்கைகளில் குறைபாடு, மெத்தனம் இருக்க வேண்டும்.

மேலும் 2021-ல் டிஜிசிஏ மேற்கொண்ட ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் நிதி மேலாண்மை குறித்த ஆய்வும் சிறப்பானதாக இல்லை. தனது வெண்டார்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சரிவர கணக்குகளை முடிக்கவில்லை அதனால் உதிரிபாகங்கள் பற்றாக்குறை இருப்பதையும் கண்டறிந்துள்ளோம்.

இவற்றையெல்லாம் வைத்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது பயணிகளுக்கு பாதுகாப்பான, சிறப்பான, நம்பத்தகுந்த விமான சேவைகளை வழங்கவில்லை என்று கருதப்படும். எனவே அண்மைச் சம்பவங்கள் குறித்து விரிவான விளக்கமளிக்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.