செங்கல்பட்டு மாவட்டத்தில் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி அருகே பொத்தேரி குமரன் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(46). இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்று வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தின இரவு வழக்கமாக வியாபாரம் முடிந்த பிறகு, கடையை பூட்டு போட்டு பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து வழக்கமாக நேற்று காலை, கடையை திறப்பதற்காக வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவகுமார், கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த 11 ஆயிரம் ரூபாய் திருட போயிருந்தது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து சிவகுமார் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.