தமிழ் இளைஞர்கள் 2 பேர் கொலைமியான்மர் பயங்கரவாதிகள் அட்டூழியம்| Dinamalar

யாங்கூன்-தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் மோரெக் நகரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மோகன், 28, அய்யனார், 35, ஆகிய இருவரும் வசித்தனர். அங்கு வசித்த பலர் அருகிலுள்ள மியான்மர் நாட்டில் சென்று வேலை செய்கின்றனர். இதைப் பார்த்து மோகனும், அய்யனாரும் எல்லை தாண்டி மியான்மர் சென்றனர். மோகன் ஆட்டோ டிரைவர் வேலைக்குச் சேர்ந்தார். அய்யனார் கடை நடத்தினார். இந்நிலையில், இந்தியா – -மியான்மர் எல்லையில் தமு என்ற இடத்தில் இருவரும் நெற்றியில் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தனர்.

மியான்மரில் ‘பியூஷாதி’ என்ற இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மோகன், அய்யனார் ஆகிய இருவரையும் சுட்டுக் கொன்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரது உடல்களும் மியான்மர் அரசு மருத்துவமனையில் உள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட மோகனுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மோரெக் நகர தமிழ் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, மத்திய அரசு உத்தரவுப்படி சர்வதேச எல்லை மூடப்பட்டது.

ஆனால் இரு நாட்டு மக்களும் தங்களது வர்த்தகம் மற்றும் வாழ்வாதாரத்துக்காக எல்லையை கடந்து சென்று வருகின்றனர். தமிழ் இளைஞர்கள் உளவு பார்த்ததாக மியான்மர் ராணுவம் சந்தேகித்து இருக்கலாம்.கொல்லப்பட்ட இருவரும் மோரெக் நகரில் பிறந்து வளர்ந்தவர்கள். உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்த சம்பவத்தைக் கண்டித்து மோரெக் நகரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.