வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்,-இலங்கையில், 67 லட்சத்திற்கும் அதிகமானோர் தேவையான உணவின்றி தவிப்பதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது.நம் அண்டை நாடான இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது.
இந்நிலையில் ஐ.நா., வின் சர்வதேச உணவு திட்டத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையில், 2.20 கோடி மக்கள் வசிக்கும் நிலையில், 67 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு போதுமான உணவு கிடைக்காத நிலை உள்ளது. அவர்களில், 53 லட்சம் பேர் அரைப் பட்டினியில் இருக்கின்றனர். வரும் மாதங்களில் நெல் பயிரிடும் பரப்பு, 50 சதவீதமாக குறையும். மீன் மற்றும் கால்நடை துறைகள் விரைவில் இயல்புநிலைக்கு திரும்பும் சூழல் இல்லை.
விவசாயிகளுக்கு தேவையான உரம், விதைகள், நிதியுதவி கிடைக்காத பட்சத்தில், உணவுப் பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே கடந்த ஜூனில், உணவுப் பணவீக்கம், 80 சதவீதம் உயர்ந்துள்ளது. உலக உணவு திட்டத் துறை, உடனடியாக களமிறங்கி, வரும் டிசம்பருக்குள், இலங்கையில் 34 லட்சம் பேருக்கு உணவுப் பாதுகாப்பை வழங்க உறுதி பூண்டுள்ளது.
இதற்காக, 500 கோடி ரூபாய் நிதியுதவி தேவை என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, ஐ.நா., அவசர நிதியம் உள்ளிட்டவற்றின் வாயிலாக இதுவரை, 150 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement