அக்னிபத் திட்டத்தில் அடுத்த சர்ச்சை: சாதி, மத சான்றிதழ் கேட்கும் இந்திய ரணுவம்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது.

இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த திட்டத்தை ஆதரித்தும், விமர்சித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், இந்தத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு திட்டவட்டமாக உள்ளது.

இதையடுத்து, டூர் ஆப் தி டூட்டி எனும் இந்த அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களை தேர்வு செய்யும் பணி அண்மையில் தொடங்கியது. அதன்படி, அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் சேர விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களிடம் சாதி, மத சான்றிதழ்களை இந்திய ராணுவம் கேட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது சாதி மற்றும் மதச் சான்றிதழ்களை சமர்ப்பிக்குமாறு இந்திய ராணுவம் கேட்டுள்ளது. இந்திய ராணுவத்தை பொறுத்தவரை எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி, இ.டபிள்யூ.எஸ், மத ஒதுக்கீடு என எந்தவொரு இடஒதுக்கீடும் பின்பற்றப்படுவதில்லை. மெரிட் அடிப்படையில் மட்டுமே வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில், அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களிடம் இந்திய ராணுவம் சாதி, மதச் சான்றிதழ்களை கேட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய ராணுவம் விளக்கமளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.